Friday, July 4, 2014

Always question

​காலம்சுழன்று ​காட்சிகள் மாறினாலும் 
கால்கள் நிற்பதில்லை 
சுவடுகள் அழிவதில்லை ! 

தேடல்கள் தொடர்ந்தும் கிட்டவில்லை 
தேவைகள் கூடுவதால் 
தேடுவதும் ஓய்வதில்லை ! 

மக்கள்வெள்ளம் பெருகி வழிவதனால் 
அலுவல்கள் விரிந்தாலும் 
அரிதே இன்றும் வேலைவாய்ப்பு! 

கல்விக்கூடங்கள் கடலென ஆனாலும் 
தரமிக்க கல்வியிங்கே 
தடமாறிப் போனதய்யா ! 

பள்ளி கல்லூரி வாயில்களில் இன்று 
பையோடு காத்துள்ளனர் 
கையோடு இடமும் பெற்றிட ! 

வியாபார அங்காடிகள் ஆனதப்பா 
வணிக நோக்குடனே 
விற்பனையில் கல்வியும் இங்கே ! 

கண்மூடி கண் திறப்பதற்குள் இன்று 
மண்மேடுகள் ஆயினும் 
மாளிகைகள் கோபுரங்கள் ஆகுதே ! 

தடம் புரண்ட மனங்கள் சிலரால் 
தரைமட்டமும் ஆகிறதே 
தரமிழந்த கட்டிட வேலையால் ! 

சாதிமத வெறியின்று தொடர்வதால் 
சந்ததிகள் எதிர்காலம் 
சறுக்கிவிழும் பனிக்கட்டி ஆனதே ! 

அரசாண்டு மக்களுக்கு உதவாமல் 
ஆள்பவர் மட்டும் அரசராய் 
அல்லாதவர் எவரும் அல்லலுடன் ! 

ஒருபிடி சோற்றுக்கு உழைப்பவனும் 
ஈட்டிடும் காசை இழக்கின்றான் 
இருநேரமும் அதில் குடிக்கின்றான் ! 

ஏழைகள் என்றுமே ஏழைகளாய் 
ஏய்ப்பவர் மேய்ப்பவராய் 
நடுத்தரம் புலம்பலுடன் உலவுகிறது ! 

அடுத்தவர் பணத்தை அள்ளிவழங்கி 
கொடுத்து சிவந்த கரம்போல 
கெடுத்தே வாழ்கின்றார் பலரிங்கே ! 

உண்மை நிரந்தரமாய் உறங்குகிறது 
பொய்மை பேயாட்டம் ஆடுகிறது 
பொறுப்பவர் போராட்டம் தொடர்கிறது ! 

உண்ணும் பொருட்களில் கலப்படம் 
உலவிடும் மனிதர்களோ நிழற்படம் 
உலகில் இனி எதுதான் எடுபடும் ..... 

இரக்கம் இவ்வுலகில் இறந்தது 
உதவிடும் எண்ணம் மறைந்தது 
நல்லவர் வாழ்வதும் குறைந்தது ! 

புரிதல் புவிதனில் அகன்றது 
மனிதம் மண்ணிலே புதைந்தது 
குற்றங்கள் மலைபோல குவிகிறது ! 

சிந்திக்கும் சிந்தையோ சிதறுகிறது 
நிந்திக்கும் நெஞ்சங்கள் கூடுகிறது 
நித்திரையில் தமிழினமோ உழல்கிறது ! 

இனப்பற்றும் இடையே இடம்பெயருது 
மொழிப்பற்று நாளும் சிதைகிறது 
தமிழினமே தமிழகத்தில் தகர்கிறது ! 

வினாக்கள் விடையின்றி தவிக்கிறது 
கனாக்கள் களைப்பின்றி வருகிறது 
பேனாக்கள் தடையின்றி எழுதுகிறது ! 

No comments:

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....